/* */

செங்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி

செங்கம் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது கார் மோதி பலியானார்.

HIGHLIGHTS

செங்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி
X

செங்கம் அருகில் உள்ள செ.நாச்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 21). இவர் நேற்று மாலை செ.நாச்சிபட்டு கிராமத்தில் இருந்து செங்கத்தை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். செங்கத்தை அடுத்த முருகர் கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி சென்ற ஒரு பால் டேங்கர் லாரியை பிரசாத் முந்திச்செல்ல முயன்றார்.

அப்போது எதிரே வந்த ஒரு காரும், பிரசாத் சென்ற மோட்டார்சைக்கிளும் மோதி கொண்டன. அதில் தூக்கி வீசப்பட்ட பிரசாத் பால் டேங்கர் லாரியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், உயிரிழந்த பிரசாத்தின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரியும் அவரின் உறவினர்கள் பிரசாத்தின் உடலை எடுக்கவிடாமல் தடுத்து, அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரசாத்தின் உடலை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 April 2022 12:15 AM GMT

Related News