ஆரணியில் பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு
ஆரணியில் பட்டாசு கடைகளில் அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகளை வியாபாரிகள் திறந்து உள்ளனர்.
விழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க, வெடி பொருள் சட்டம் 84ன்படி உரிமம் வழங்கப்படுகிறது. வெடி பொருளின் அளவை பொருத்து மாநகர் காவல் ஆணையர் அல்லது வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பட்டாசு கடை வைக்க அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு துறை, கடை அமையும் நிலத்தின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தடையில்லா சான்று பெற்று மனுவுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த சட்ட விதிகளை பின்பற்றி உரிமம் வழங்கினாலே விபத்துகள் நடைபெறுவதை தவி்ர்க்க முடியும்.
பட்டாசு கடைகளில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை தீயணைப்பு துறை வெளியிட்டிருந்தது.
அதன்படி, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றுகள் பெற்றால் தான் அந்தந்த வருவாய்த்துறை இடமிருந்து மற்றும் காவல்துறையிடம் இருந்தும் பட்டாசு கடை திறப்பதற்குரிய உரிமம் பெற முடியும்.
- பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும்.
- கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும்.
- கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரிமம் கேட்பவர்கள் தீயணைப்பு, உள்ளாட்சி, காவல் துறையிடம் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம்.
- அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லை.
- உதிரி பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக்கூடாது.
- 2 தீயணைப்பு கருவிகள், 2 லாரிகளில் தண்ணீர், மணலை தயாராக வைத்திருக்க வேண்டும்.
- இங்கு புகை பிடிக்கக் கூடாது உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
- பட்டாசு கடையின் அருகே தீயணைப்பு துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும்.
- பட்டாசு கடைகளில் வேறு பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது.
- அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்க கூடாது.
கடை உரிமத்தை தணிக்கையின் போது அலுவலர்களின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும் இருப்பு தணிக்கை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும் உள்பட 30 விதிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது.
இந்த விதிமுறைகளின்படி பட்டாசு கடைகள் அமைந்துள்ளதா, வியாபாரிகள் இதனை ஒழுங்காக பின்பற்றுகிறார்களா என திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 11 பட்டாசு கடைகளை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
அதில் முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஏதேனும் தவறுகள் நடைபெறும் பட்சத்தில் உடனடியாக கடைக்கு சீல் வைக்கப்படும் என வியாபாரிகளுக்கு தெரிவித்தார்.
ஆய்வின்போது ஆரணி வட்டாட்சியர்ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் , திருவேங்கடம் வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறையினர் , வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.