திருவள்ளூர் அருகே மெய்யூரில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, பசுமாடு பரிதாபமாக உயிரிழப்பு..!
திருவள்ளூர் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் பசு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்பவர் மனைவி வசந்தா (53). கூலி விவசாயி. மெய்யூர் சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் மூதாட்டி வசந்தா வீட்டின் முன்பு இருந்த மின் ஒயர் அறுந்து விழுந்து கிடந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த வசந்தா, அதனை கவனிக்காமல் மின் ஒயரை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து வசந்தா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவலறிந்து பெரியபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல, வசந்தா வீட்டின் அருகில் வசிக்கும் முரளி என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின் ஓயரை மிதித்ததில் பரிதாபமாக இறந்து போயுள்ளது. இந்த இரு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.