குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்களுடன் மாவட்ட கண்காணிப்பாளர் கலந்துரையாடல்
முன்னீர்பள்ளம் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் மூலம் அப்பகுதி ஊர்தலைவர்கள், பொதுமக்களுடன் சமாதானம் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் தலைமையில் கருங்குளம் நயினார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் பொதுமக்களுடன் கலந்துரையாடி தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து குற்றச் செயல்களை தடுக்க வேண்டும்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களை முறையாக நல்வழிப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகளை சாதி, மத, பேதமின்றி வளர்க்கவும், தங்கள் குழந்தைகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களில் உயர்ந்த நிலையை அடையவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பாடுபடவேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் முன் வைக்கும் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் மாவட்ட காவல்துறை மூலம் அரசுக்கு எடுத்து வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பின்னர் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கைகளை பாராட்டி காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.