நெல்லை மாநகர காவல்துறை புதியஆணையாளர் துரை குமார் பொறுப்பேற்பு
குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிய காவல் ஆணையர் துரை குமார் தெரிவித்தார்.
HIGHLIGHTS
நெல்லை மாநகர காவல்துறையின் 40வது காவல் ஆணையாளராக துரை குமார் ஐஜி இன்று பதவியேற்றார். இவர் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையாளராக பதவி வகித்து வந்த நிலையில், பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் வேலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கி முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர், சிபிஐ கண்காணிப்பாளர், சிபிஐ டிஐஜி உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்திருந்தார்.
இன்று நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட பின் ஆணையாளராக கோப்புகளில் கையெழுத்திட்டு, பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதிய ஆணையாளர் துரை குமார் கூறுகையில், நெல்லை மாநகர காவல்துறை நெல்லை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பொது மக்கள் அமைதியாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்படும். நெல்லை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.