ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு மயக்க கேக் கொடுத்து 9 பவுன் நகை அபேஸ்
ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு மயக்க கேக் கொடுத்து 9 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா நெய்தலூரை சேர்ந்த மதியரசனின் மனைவி புஷ்பவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று காரைக்காலில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் வந்தார். வழியில் கும்பகோணத்தில் அந்த பஸ்சில் ஏறிய ஒரு பெண், புஷ்பவல்லிக்கு மயக்க மருந்து கலந்த கேக் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் பஸ்சில் மயங்கி விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண், புஷ்பவல்லி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகைகளை அபேஸ் செய்து கொண்டு சென்றுவிட்டார். மயக்கம் தெளிந்து அவர் பார்த்தபோது, அந்த பஸ் திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து விட்டது. அப்போது தான், நகைகளை பறி கொடுத்தது அவருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் மயக்க கேக் கொடுத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள்.