சிறப்பாக பணியாற்றிய 19 காவல்துறையினர் : எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 19பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
HIGHLIGHTS
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 5 பேர்களை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நாராயணசாமி, பிடரிக்ராஜன், கோவில்பட்டி போக்குவரத்துப் பிரிவு தலைமை காவலர் முருகன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் காசி, கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் ஸ்ரீராம், புதூர் காவல் நிலைய காவலர் பிரபு பாண்டியன், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு, காவலர் கணேசன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 2011ஆம் ஆண்டு சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி தங்கராஜ் என்பவர் பரோலில் வெளிவந்து விடுப்பு முடித்து சிறைக்குச் செல்லாமல் தலைமறைவாக இருந்த வரை நீதிமன்ற உத்தரவுப்படி துரிதமாக செயல்பட்டு கைது செய்த சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, தலைமை காவலர் சங்கர், முதல் நிலை காவலர் கயிலங்கிரிவாசன், காவலர் கணேசன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு 08.7.2021 அன்று வேல்முருகன் என்பவரை மர்ம நபர்கள் கடத்தி சென்ற போது தருவைகுளம் சமத்துவபுரம் அருகில் வாகன சோதனை செய்து காரில் சந்தேகப்படும்படியாக இருந்த நபர்களை விசாரித்தபோது மேற்கண்ட வேல்முருகனை கடத்தி வந்தவர்கள் என தெரியவந்ததால் மேற்படி நபர்களை கைது செய்த தருவைகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, காவலர் முத்துவேல் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
திருப்பூரில் கோயா பேச்சிமுத்து என்பவரை கொலை செய்த வழக்கில், திருப்பூர் சிறையில் உள்ள எதிரிகள் சுடலைமணி மற்றும் 3 பேர்கள் ஜாமீனில் வெளியே வருவதை அறிந்து அவர்களை கொலை செய்ய கோயா பேச்சிமுத்துவின் அண்ணன் சுருளி, காளையின் மகன் மணி மற்றும் 3 பேர்கள் திருப்பூரில் தங்கி இருந்த இடத்தை அடையாளம் தெரிந்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை கைது செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கொப்பம்பட்டி காவல் நிலைய வழக்கில் முன்கூட்டியே தகவல் கொடுத்து கொலை சம்பவம் நடைபெறாமல் தடுத்த கொப்பம்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ராஜகுமார் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும், உடன் பணிபுரியும் காவலரின் சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு A+ வகை இரத்தம் தானமாக வழங்கிய மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலர் நாகராஜன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.