தூத்துக்குடி: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேரும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர் விடுதியில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழக அரசால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கு என்று மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பள்ளி மாணவர்களுக்கு என்று 27 விடுதிகளும், பள்ளி மாணவியர்களுக்கு என்று 23 விடுதிகளும், 1 ஐடிஐ மாணவர் விடுதியும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு 1 விடுதியும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2023-2024 ஆம் ஆண்டில் புதிதாக மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
பள்ளிகளில் நான்காம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகள், கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த விடுதிகளில் சேரலாம். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 85 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும் இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படுகின்றனர்.
அனைத்து விடுதி மாணவ மாணவிகளுக்கும் உணவும் உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி இலவசமாக வழங்கப்படும்.
54 விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும்மேல் இருக்க வேண்டும். 5 கிலோமீட்டர் நிபந்தனை மாணவிகளுக்கு பொருந்தாது. ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
தகுதியுடைய மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட் சைஸ் 3 போட்டோ, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல், நடத்தைச் சான்று, ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல் கல்வி நிலையத் தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பள்ளி விடுதிகளுக்கு 12-ம் தேதி முதலும் கல்லூரி விடுதிக்கு 19 ஆம் தேதி முதலும் காப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு https://tnadw-hms.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.