காலை உணவுத் திட்டம்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
காலை உணவுத் திட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
தமிழக அரசு மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் 79 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் தெற்கு புதுத்தெரு சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குழந்தைகளுக்கு அவர் காலை உணவு பரிமாறினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் 79 பள்ளிகளில் பயிலும் 5,580 குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை மற்றும் கற்றல் திறன் அதிகரித்து உள்ளது. மேலும், குழந்தைகள் ஈடுபாட்டுடன் கல்வி கற்பதற்கு வழிவகை ஏற்பட்டு உள்ளது. தமிழகம் அளவில் 1,978 பள்ளிகளில் 1,66,098 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 18 பள்ளிகளில் 2,636 குழந்தைகள், விளாத்திகுளம் ஒன்றியத்தில் 56 பள்ளிகளில் 2,350 குழந்தைகள், கோவில்பட்டி நகராட்சியில் 5 பள்ளிகளில் 594 குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.