மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கும் திராவிட மாடல் ஆட்சி: அமைச்சர் கீதாஜீவன்
கருணாநிதி அமைத்த அடித்தளம் மூலம் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து தெரிவித்ததாவது:
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எட்டபுரத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மக்கள் தங்களுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை உடனே சென்று பார்க்க வேண்டும்.
நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணமாக்க முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவத்துறையும், கல்வித்துறையும் தனது இரண்டு கண்கள் என்று தெரிவித்துள்ளார்கள். கல்வி என்பது மக்களை பண்படுத்தி அறிவாற்றலை தரக்கூடியது. அதுபோல் மருத்துவம் என்பது நமது ஆயுளை அதிகரித்து தரக்கூடியது.
தற்போது மருத்துவ தொழில்நுட்பங்கள் அபரிமிதமான அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மருத்துவத்துறைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்ததைப்போன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். எல்லா இடங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ சேவைகள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மறைந்த கருணாநிதி அமைத்த அடித்தளம் மூலம் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.