செல்போன் பறித்தவனை விரட்டி சென்ற துணை முதல்வர் பலி
தஞ்சையில் செல்போன் பறித்தவனை விரட்டி சென்ற துணை முதல்வர் சாலை விபத்தில் பலியானார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் எல்.ஐ.சி., காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் பேராசிரியர் ஜியாவுதீன் (58). இவர் அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கலைக் கல்லூரியில் துணை முதல்வராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு, தஞ்சாவூர் யாகப்பா நகரில் உள்ள பள்ளிவாசலில் தொகையை முடித்துவிட்டு, தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 7:15 மணியளவில், எலிசா நகர் அருகே சாலையோரமாக, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தர்.
அப்போது அந்த வழியாக டூ விலரில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜியாவுதீன், திருடர்களைப் பிடிக்க, தனது ஸ்கூட்டியில் விரட்டிச் சென்றார்.
அப்போது, முனிசிபல் காலனி 1வது தெருவில் சென்ற போது, எதிர் பாராவிதமாக ரோட்டில் நிலை தடுமாறி கிழே விழுந்தார்.இதில் அவரின் பின்பக்க தலையில், படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருத்துவகல்லூரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.