தஞ்சாவூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நான்கு மதுக்கூடங்களுக்கு சீல்: 4 பேர் கைது
தஞ்சாவூர் வடக்கு வீதி தற்காலிக பேருந்து நிலையம் சிஆர்சி டெப்போ ஆகிய பகுதிகளில் 4 மதுக்கூடங்கள் இயங்கி வந்தன
HIGHLIGHTS
தஞ்சாவூர் நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நான்கு மதுக்கூடங்களை டாஸ்மாக் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டாஸ்மாக் அதிகாரிகள் தஞ்சை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருடன் இணைந்து திடீர் ரெய்டு நடத்தினர். இதில் தஞ்சாவூர் வடக்கு வீதி, தற்காலிக பேருந்து நிலையம், சிஆர்சி டெப்போ ஆகிய பகுதிகளில் 4 மதுக்கூடங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அம் மதுக்கூடங்களை டாஸ்மாக் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) பி.வெங்கடேஷ்வரன், உதவி மேலாளர் (கணக்கு) மகேந்திரன், இளநிலை உதவியாளர்கள் தியாகராஜன், அலுவலக உதவியாளர் கோபி ஆகியோர் இடம்பெற்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக, சாந்தகுமார் (51), அருமைராஜ் (50), கிருஷ்ணன் (54), யோகநாதன் (62) ஆகிய 4 நபர்களை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 பிராந்தி பாட்டில்கள் மற்றும் 11 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.