'இந்தியை திணிக்கவில்லை, கற்றுக் கொள்ள சொல்கிறோம்'- பா.ஜ.க தந்த 'புது விளக்கம்'
‘இந்தியை நாங்கள் திணிக்கவில்லை, கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி வருகிறோம்’ என, பா.ஜ.க அகில இந்திய விவசாய அணித்தலைவர் ராஜ்குமார் சாகர் கூறினார்.
HIGHLIGHTS
குற்றாலத்தில் கடந்த மூன்று நாட்களாக, பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில், 'பண்டிட் தீனதயாள் பயிற்சி' நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவு நாளான இன்றைய பயிற்சி முகாமில், பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய விவசாய அணி தலைவர் ராஜ்குமார் சாகர் எம்.பி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய விவசாய அணி தலைவர் ராஜ்குமார் கூறியதாவது :
பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல அளவில் பயிற்சிகள் நடத்துகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாஜகவின் வளர்ச்சி, முக்கியத்துவம் குறித்து முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்காகவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காக மோடி பாடுபடுகிறார். தமிழகத்தில் திமுக, குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. ஆனால் பாஜக இவ்வாறு இல்லை. இமாச்சலம், குஜராத் மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி வரும். தமிழகத்தில் மோடியை அதிக அளவில் மக்கள் விரும்புகின்றனர் பா.ஜ.க குறித்து மக்கள் மெல்ல மெல்ல அறிய தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமையும். தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இது குறித்து வேளாண் அமைச்சரிடம் எடுத்துக் கூற உள்ளோம். ஸ்டாலின் தமிழகத்தில் மக்களை ஏமாற்றுகிற வேலையை செய்கிறார். ஸ்டாலின் (Failure) பெயிலியர் முதல்வர்.
பா.ஜ.க எல்லா மொழிகளையும் ஆதரிக்க கூடியது. தமிழில் அதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்தியை நாங்கள் திணிக்கவில்லை, கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி வருகிறோம். திமுக தமிழகத்தில் தனிப்பட்ட அரசியல் செய்து வருகிறது, பாஜக எல்லோரையும் ஒருங்கிணைக்கும் விதமாக அரசியல் நடத்தி வருகிறது. விரைவில் மோடி தலைமையான பா.ஜ.க ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகம் மென்மேலும் வளரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி முகாமில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவர் நாகராஜ், பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் புகழேந்தி, பயிற்சி முகாமின் தலைவர் மற்றும் விவசாய அணி மாநில துணைத்தலைவர் எஸ் ஆர் தேவர், கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் , தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன், விவசாய அணி மாவட்ட தலைவர் முத்துபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் விஜய் சேகர் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.