தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பகுதி, அவசர சிகிச்சை பகுதி, இதயவியல் பகுதி, குழந்தைகள் வார்டு . பெண்கள் வார்டு ,பிரசவ வார்டு மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் என அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் மருத்துவர் செல்வ பாலா உடன் இருந்தனர்.
வெளி நோயாளிகள் பகுதிகளில் தினம் வரும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இருப்பதையும், மருந்துகளின் இருப்பையும் ஆய்வு செய்து உறுதி செய்தார்.
அவசர சிகிச்சை பகுதியில் 24 மணி நேரமும் இரண்டு மருத்துவர்கள் இருந்து பணி செய்து இருக்கிறார்கள் என்பதை கேட்டு, மருத்துவர்களையும் செவிலியர்களையும் பாராட்டினார்.
இந்த மாதத்தில் அவசர சிகிச்சை பகுதியில் வந்த ஆறு மணி நேரத்திற்குள் ஒன்பது உயிர்காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதை ஆய்வு செய்து அறுவை சிகிச்சை குழுவினரையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் பாராட்டினார்.
இதயவியல் பகுதியில் தினமும் இரண்டு முதல் மூன்று மாரடைப்பு நோயாளிகளுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளித்து காப்பாற்றப்படுகிறார்கள் என்பதை அறிந்து பொது மருத்துவர்களையும் இதயவியல் நிபுணரையும் வெகுவாக பாராட்டினார்.
இணை இயக்குனர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரின் நீண்ட நாள் கோரிக்கையான எக்கோ மிஷின் தென்காசி மருத்துவமனைக்கு உடனடியாக வாங்கி வழங்குவதாக உறுதி அளித்தார்.
குழந்தைகள் பகுதி கழிவறை மற்றும் செப்டிக் டேங்க் பணிகள் நடந்து முடிந்து, இன்று காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டிருப்பதை பார்வையிட்டார்.
மழைக்காலங்களில் வரும் தொற்று நோய்களுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் இருப்பு, கூடுதல் படுக்கைகள், பரிசோதனை வசதிகள் மற்றும் பணியாளர்களின் வருகை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என இணை இயக்குனர் நலப் பணிகள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கூறினார் .
தமிழக அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கண் அறுவை சிகிச்சையில் இரண்டாவது இடத்திலும், பொது அறுவை சிகிச்சையில் ஐந்தாவது இடத்திலும், தமிழக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக தென்காசி செயல்படுகிறது. இந்த செயல்பாட்டிற்கு காரணமான இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் செல்வ பாலா மற்றும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரையும் பாராட்டினார்.