எடப்பாடி தொகுதியில் மு.க. ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சம்பத் குமாரை ஆதரித்து சாலை நடந்து சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
HIGHLIGHTS
தமிழக தேர்தலுக்கான பரப்புரைக்கு முடிவு பெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு் வருகின்றனர்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றினர்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமார் ஆதரித்து வாக்கு சேகரித்தார். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை அவர் நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வேட்பாளருடன் அமர்ந்து ஸ்டாலின் டீ குடித்தார்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். ஏற்கனவே இரண்டு முறை பரப்புரைக்காக சேலம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து செவ்வாய்பேட்டை பகுதியிலும், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினியை ஆதரித்து தலைவாசல் பகுதியிலும் நடந்து சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.