தாட்கோ மூலம் கறவை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி : ஆட்சியர் தகவல்
TAHDCO Loan -கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடுகள் வாங்கலாம்
HIGHLIGHTS
TAHDCO Loan -கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடுகள் வாங்க தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
2022-23ம் ஆண்டு அரசின் புதிய அறிவிப்பின்படி, தாட்கோ மூலம் பெருமளவில் விவசாயத் தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடுகள் வாங்க நபர் ஒருவருக்கு ரூ.1.50 இலட்சம் என்ற விதத்தில் திட்டத்தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.45000- மானியத்தொகையும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகவும் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.
மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக இருப்பின்; http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்பஅட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை ஆகிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய மாவட்ட மேலாளர், மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04322-221487 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு கடன் பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடன் பெற 3 சதவீதம் மானியம் ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களான வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு 30 சதவீத அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு 50 சதவீதம் அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.பழங்குடியின மக்களுக்காக செயல் படுத்தப்படும் திட்டங்களான தொழில் முனைவோர் திட்டம், நில மேம்பாட்டு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டம் ஆகும். இத் திட்டங்களுக்கு 50 சதவீத அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2