அக்.11 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மையங்களில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி
தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என மேற்கண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
HIGHLIGHTS
அக்.11-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மையங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெறவுள்ளது.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரும் அக்டோபர் 11 அன்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மனித சங்கிலி இயக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெறுகிறது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இடதுசாரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் அக்.2 அன்று தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என அக்கட்சிகளின் தலைமை அறிவித்து இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மேற்கண்ட அமைப்புகளோடு காங்கிரஸ், மதிமுக, திக. முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் இணைந்து வருகின்ற 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என மேற்கண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த மனித சங்கிலி இயக்கத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் மாத்தூர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் இப்பராஹிம்பாபு, திக மாவட்டச் செயலாளர் அறிவொளி, விசிக மாவட்டச் செயலாளர் செப.பாவாணன், சசி.பா.கலைவேந்தன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் அஸ்ரப்அலி. மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் துரை முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூர், அன்னவாசல், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய 9 மையங்களில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், இந்த மனித சங்கிலி இயக்கத்தில் மேற்படி கட்சி அணிகள், மக்கள் ஒற்றுமையை விரும்பும் அமைப்புகள், பொதுமக்கள் என மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டுவது எனவும், இது குறித்து மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் இந்த சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையே தான் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக டிஜிபியை சந்தித்து முறையிட்டு சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டடத்துக்கு அனுமதி பெறுவோம். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று திருமாவளவன் கூறியிருந்தார். இதையடுத்து காவல்துறையினர் அனுமதியளித்தபடி அக். 11 -ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.