புதுக்கோட்டை அருகே விபத்து: ஐயப்ப பக்தர்கள் 5 பேர் உயிரிழப்பு
டீக்கடைக்குள் புகுந்த லாரி இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் நந்தன சமுத்திரம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
மேலும், அருகில் நின்றிருந்த கார் மற்றும் வேன் மீது பயங்கரமாக மோதியது. கார் மற்றும் வேனில் ஐயப்ப பக்தர்கள் இருந்துள்ளனர். டீக்கடையிலும் டீ குடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. லாரி மோதியதில் டீக்கடை மற்றும் வாகனத்தில் இருந்த 5 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தனர்.
19 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு எதிரே காவல் நிலையம் இருந்ததால், உடனடியாக காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.