மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: நாமக்கல் கலெக்டர் உமா
மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று நாமக்கல் புதிய கலெக்டர் உமா கூறினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து துறைகளையும், ஒருங்கிணைத்து மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று புதிய கலெக்டர் டாக்டர் உமா கூறினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, சென்னையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கலெக்டர் டாக்டர் உமா இன்று நாமக்கல் வந்து மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ். உமா எம்.பி.பி.எஸ், எம்.டி. படித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். பின்னர் சுகாதாரத்துறை துணை இயக்குனர், மருத்துவத்துறை இணை இயக்குனராக பணியாற்றினார். அவர் ஒரு சுகாதார அதிகாரியாகத் தொடங்கி, சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு அரசு அவரை 2019 ம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணிகள் (ஐ.ஏ.எஸ்) கேடருக்குப் பதவி உயர்வு அளித்தது. மாநிலத் தேர்வின் கீழ் சிவில் சர்வீசிற்கு (ஐ.ஏ.எஸ்) பதவி உயர்வு பெற்ற, இந்தியாவின் முதல் டாக்டர் என்ற பெருமை அவருக்கு உள்ளது. 2019-20 வரை பழனியில் சப் கலெக்டராகவும், 2020-21 வரை ராணிப்பேட்டையில் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றினார்.
மே 2021 இல் கோவிட்-19 இன் 2வது அலையின் போது மாநில அளவில், சென்னையில் வார் ரூமில் படுக்கை மேலாண்மைக்கான நோடல் அதிகாரியாக அவர் பணியாற்றினார். அவர் தமிழக அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகளின் ஹெல்ப்லைன் மற்றும் அழைப்பு மையத்திற்கும் தலைமை வகித்துள்ளார்.தற்போது அவர் சுகாதார சீர்திருத்த திட்ட இயக்குனர் பதவியில் இருந்து, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலெக்டராக பொறுப்பேற்ற டாக்டர் உமா, மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, மாவ ட்டத்தின் ஒட்டுமொத்த மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தின் 16வது கலெக்டராக பொறுப்பேற்ற, டாக்டர் உமாவுக்கு அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.