கால்நடை மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் கவுன்சலிங் இந்த வாரம் துவங்கும்: துணைவேந்தர் தகவல்
Veterinary College Admission - தமிழகத்தில் கால்நடைமருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் கவுன்சலிங் இந்த வாரம் துவங்கும் என்று, கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
Veterinary College Admission -
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் சொசைட்டி (ஐஎஸ்விபிடி) சார்பில், 22வது அகில இந்திய மருந்தியல் மற்றும் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. கால்நடைகளில் நோய் தடுப்பு மற்றும் உற்பத்தி பெருக்கத்திற்கான புதிய ஆராய்ச்சிகள் என்ற தலைப்பில், 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கு துவக்க விழhவிற்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை வகித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். உத்தரப்பிரதேச கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தர் ஸ்ரீ வஸ்தவா, ராஜஸ்தான் பல்கலை துணைவேந்தர் சதீஷ் கே கார்க், ஐஎஸ்விபிடி தலைவர் தாக்கர், கருத்தரங்க அமைப்பு செயலாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சர்வதேச அளவில் மருந்தியல் மற்றும் நச்சியல் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், இந்திய அளவில் கால்நடைகளுக்கு மருந்துகளின் பயன்பாடு மற்றும் உற்பத்தி பெருக்கத்திற்கான உத்திகள் குறித்து விரிவாக பேசினர்.. சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சியாளர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
கருத்தரங்கம் முடிவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலை மூலம், தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், இளநிலைப் பிரிவில் பி.விஎஸ்சி கால்நடை மருத்துவம், மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பிரிவில் பி.டெக் - உணவு தொழில் நுட்பம், பி.டெக் - பால்வளம், பி.டெக் - கோழி வளர்ப்பு ஆகிய பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகிறது. தற்போது 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பி.விஎஸ்சி கால்நடை மருத்துவ படிப்பிற்கு மொத்தம் 580 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்கள், சின்ன சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 80 இடங்கள், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் தலா 40 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பி.டெக் படிப்பிற்கான கல்லூரிகள் சென்னை கொடுவல்லியிலும், ஓசூரிலும் அமைந்துள்ளன.
580 இடங்களில் 15 சதவீதம், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் மூலம் அகில இந்திய அளவில் நிரப்பப்படும். மீதம் உள்ள இடங்கள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், இயற்பியல், வேதியல் பாடத்திற்கு தலா 50 மதிப்பெண் வீதமும் மொத்தம் 200 மதிப்பெண்ணுக்கு, மாணவ மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்படும். பி.டெக் பிரிவிற்கு உயிரியல், இயற்பியில், வேதியியல் பாடத்துடன் கணிதப் பாடத்திற்கான மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தலா 50 சதவீத மதிப்பெண் அடிப்படையில், மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் தரவரிசைப்பட்டியல் ஏற்கனவே, கால்நடை மருத்துவப் பல்கலை வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்புப்பிரிவினருக்கான இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்கள் விரைவில் நிரப்பப்படும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரத்தில் துவக்கப்படும். அது குறித்து பல்கலை வெப்சைட்டில் விபரம் வெளியிடப்படும். முதல் கட்ட கவுன்சலிங் முடிவடைந்ததும், காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சலிங் நடைபெறும் என்று கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2