நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்
மத்திய இணை அமைச்சர் முருகன், நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
HIGHLIGHTS
மத்திய இணை அமைச்சர் முருகன், நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரையில் நடக்கும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின், 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் முருகன், சேலத்தில் இருந்து கார் மூலம் நாமக்கல் வழியாக சென்றார். அப்போது, நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் நடந்த பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது, ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பச்சை ஆடை உடுத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அவரது பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திருக்கோயில் சார்பில் அவருக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, பரமத்திவேலூர் தாலுக்கா, குஞ்சாம்பாளையத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயில்களான, பெருமாள் சுவாமி, வீரமாத்தியம்மன், கன்னிமார்கள், நல்லையன், சங்கிலி கருப்பன் சுவாமி கோயில்களி1ல், மத்திய இணை அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், தேசிய செயற்குழு உறுப்பினர் மனேகரன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் சரவணன் உள்ளிட்டோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.