நாமக்கல்லில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழு போலீசாருக்கு பயிற்சி
நாமக்கல்லில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழு சார்பில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, மாநிலம் முழுவதும், பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர், மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், மாநில பேரிடர் மேலாண் மீட்புக்குழுவினர், நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில், அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
ஆயுதப்படை டி.எஸ்.பி இளங்கோவன், பயிற்சி முகாமை நேரில் பார்வையிட்டார். மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது எனபது குறித்து குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.