கரும்பு ஆலையில் தீ வைப்பு சம்பவம்: ஒடிசா மாநில தொழிலாளி உயிரிழப்பு
ஜேடர்பாளையம் அருகே கரும்பு ஆலை தீ வைப்பு சம்மபவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநில தொழிலாளி கரூர் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, வடகரை ஆத்தூர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக 17 வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு பல்வேறு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த 14ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சரளைமேடு, ராஜீவ் காந்தி காலனியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது, வெல்லம் தயாரிக்கும் ஆலையில் உள்ள, ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட குடியிருப்பில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
கொட்டகைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது தீப்பிடித்தது. தொழிலாளர்கள் ராகேஷ் என்கிற ரோக்கி, சுக்ராம், எஸ்வந்த் ஆகிய 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு 3 பேரும், ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாமக்கல் கலெக்டர் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கரூர் ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளோரை பார்வையிட்டு, சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனார். இந்த நிலையில் இன்று அதிகாலை தீ வைப்பு சம்பவத்தில் காயமடைந்த, ஒடிசா மாநில தொழிலாளி ரோக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே தமிழக போலீஸ் ஏடிஜிபி சங்கர், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி விஜயகுமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் மோப்பநாய் பிரிவுகள் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய்களைக் கொண்டு சோதனைகள் நடைபெற்றது. நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சசிகுமார், சேலம் எஸ்.பி சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீ வைப்பு சம்பத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தீ வைப்பு சம்பவத்தில் தீக்காயம் அமைந்த ஒடிசா மாநில தொழிலாளி ரோக்கி உயிரிழந்த சம்பவத்தால், போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.