காவிரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
காவிரி ஆற்றில் நீரில் முழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ரூ.1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
காவிரி ஆற்றில் நீரில் முழ்கி உயிரிழந்த, இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ரூ. 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 224 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த குமாரபாளையம் தாலுகா, குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த கனகா மகன் வசந்தகுமார், ப.வேலூர் வெங்கரையை சேர்ந்த சுப்ரமணி - தெய்வாணை மகன் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
டிஆர்ஓ (பொ) மல்லிகா, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.