பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை: நாமக்கல் எஸ்.பி தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய எஸ்.பி தெரிவித்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணியாற்றி வந்த சரோஜ்குமார் தாக்கூர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி, நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.
அவர் நாமக்கல் வந்து, மாவட்டத்தின் 27-வது எஸ்.பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். சாய்சரண் தேஜஸ்வி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். பி.இ பட்டம் பெற்று, ஐபிஎஸ் படித்துள்ள இவர், திருநெல்வேலி, குளச்சல், வடசென்னை பகுதிகளில் ஏடிஎஸ்பியாகவும், தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எஸ்.பியாகவும் பணியாற்றி உள்ளார்.
புதிய எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது முதல் கடமை. பொதுமக்கள் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் புகார்களை தெரிவிக்கலாம். அதேநேரம் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் டிஎஸ்பி அலுவலகங்களில் தகவல் கொடுத்தாலே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றங்களை பொறுத்த வரையில் புகார் வந்தவுடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்று கொடுக்கப்படும்.
இதுதவிர அரசின் இதர துறை அதிகாரிகளுடன் இணைந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு பணிச்சுமையை குறைக்க வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அது சுழற்சி முறையில் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.