நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு வார விழா.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு...
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நாமக்கல் நகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலையரசன் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியின்போது, இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மட் அணிதல், நான்கு சக்க வாகனத்தில் செல்வோர் சீட் பெல்ட் அணிதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், விபத்துகளை தவிர்க்க வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, தவறான திசையில் வாகனங்களை இயக்கக் கூடாது, அளவான வேகத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்பவை போன்ற போக்குவரத்து விதிமுறைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை இந்திய மருத்துவ சங்க நிர்வாகி மருத்துவர் மல்லிகா வழங்கினார். நிகழ்ச்சியில், நாமக்கல் டவுன் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன், அரசு கண் மருத்துவர் ரங்கநாதன், வாக்கர்ஸ் கிளப் செயலாளர் ராஜூ, எம்எம்ஏ சேர்மன் கே.வி.கணேசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.