நாமக்கல் மகரிஷி நகர் கழிவு நீர் பிரச்சினைக்கு தீர்வு: அதிகாரிகளிடம் எம்.பி வலியுறுத்தல்
நாமக்கல், மகரிஷி நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி சின்ராஜ் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
HIGHLIGHTS
நாமக்கல், மோகணூர் ரோட்டில் உள்ள மகரிஷி நகர், குடியிருப்பு பகுதியில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இங்கு 500க்கும் அதிகமான பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வடிகால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அனைத்தும் ஒரேஇடத்தில் குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அதிக அளவில் கொசு உற்பத்தியாகிறது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மகரிஷி நகர் பகுதி பொதுமக்கள் நாமக்கல் எம்.பி சின்ராஜிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, எம்.பி சின்ராஜ், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் மகரிஷி நகருக்கு, நேரில் சென்று கழிவுநீர் வெளியேற முடியாமல் ஒரே இடத்தில் தேங்கி இருப்பதை பார்வையிட்டார்.
அதன் பின்னர் இந்த பிரச்சனைக்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில் உறிஞ்சுக்குழி அமைத்து தர அவர் அதிகாரிளுக்கு உத்தரவிட்டார். கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.