நாமக்கல் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
நாமக்கல் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று பெட்டகங்கள் வழங்கினார்.
HIGHLIGHTS
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் பெட்டகங்கள் வழங்கினார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு, 50 பெண் குழந்தைகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் பெட்டகங்களை வழங்கினார்.
பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், ஆண்டுதோறும் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 11 முதல் அக்டோபர் 18 ஆம் தேதி வரை, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு, தண்டை பால்பாசி, வசம்பு, கண் மை, கருப்பு வளையல், வெள்ளை வளையல் உள்ளிட்ட பொருட்களும், குழந்தைகள் உடை-2, தொப்பியுடன் கூடிய துண்டு - 1, சோப்பு டப்பா - 1, சோப்-1, பவுடர் - 1 , சங்கடை 1, சீப்பு 1, பவுடர் பப் - 1, காது சுத்தம் செய்யும் பட்ஸ் - 1, இளம் சிவப்பு நிறத்திலான மெல்லிய உடை உள்ளிட்டவைகள் அடங்கிய பெட்டகங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பிரபா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் டாக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.