சரக்கு ஆட்டோவில் கடத்திச் சென்ற 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
நாமக்கல் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திச்சென்று ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேசன் அரிசிகள், மூட்டை மூட்டையாக கடத்தப் படுவதாக, கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலு தலைமையிலான வருவாய் துறையினர், நாமக்கல் – சேலம் மெயின் ரோட்டில் சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தாளம்பாடி பிரிவு ரோடு அருகில், அவ்வழியாகச் சென்ற சரக்கு ஆட்டோவை நிறுத்தினர். அதிகாரிகளைக் கண்ட ஆட்டோ டிரைவர், ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
ஆட்டோவை சோதனை செய்ததில், 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசியை பறிமுதல் செய்த மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலு, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தார்.
குற்றப்புலனாய்வு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள், தங்கள் பகுதியில் கள்ளத்தனமாக ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தால் 94450 00232 என்ற மொபைல் நம்பருக்க போன் செய்து தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.