மோகனூர் மாரியம்மன் கோயில் திருவிழா: ஏராளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
மோகனூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில், திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
HIGHLIGHTS
மோகனூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 18 கிராமளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த கோயிலில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்.10ம் தேதி கம்பம் நட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, தினமும், காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோயில் முன்பு நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம், இரவு, 9 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் முன்புறம் பூக்குழி அமைக்கப்பட்டு பூஜை போடப்பட்டது.
அதை அடுத்து காலை 9 மணிக்கு, அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.
மாலை 3 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்ற ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடி, ஊர்வலமாக வந்து கோயில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த, தீ குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இன்று ஏப். 25ம் தேதி, காலை 6 மணிக்கு கிடாவெட்டும், இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு கம்பம் பிடுங்கி ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை ஏப். 26ம் தேதி மாலை 3 மணிக்கு, மஞ்சள்நீர் விழா நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.