திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.
HIGHLIGHTS
நாமக்கல் அடுத்த போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (39). அவர், அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். அவரது சூளையில், விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவர், 2016ம் ஆண்டு குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
அப்போது, செங்கல் சூளை உரிமையாளரின் மகளை, திருமண ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக எருமப்பட்டி போலீசில் ராமசாமி புகார் செய்தார். சக்திவேல் மற்றும் சூளையில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த முருகன் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகனை விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது.