நாமக்கல்லில் நாளை செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
Namakkal news- நாமக்கல்லில் நாளை நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- உலகில் குணப்படுத்தவே முடியாத, ஒரு உயிர் கொல்லி நோய் என்பது, வெறிநாய்க்கடியால் வரும் ரேபிஸ் எனும் நோய்தான். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் இந்த நோயால் ஆண்டுக்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அதேவேளையில், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மை.
ரேபிஸ் நோய், ரேபிஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபிஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலூட்டி மனிதரைக் கடித்தாலும் ரேபிஸ் வரும். இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை வெறிநாய்க்கடி நோய் என்கிறோம்.
ரேபிஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத் திசுக்களை அழித்து, ரேபிஸ் நோயை உண்டாக்கும். இதுதவிர, சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால், பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம். முகத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும். நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெறிநோய் தடுப்பூசி (ஆண்ட்டி ராபீஸ்) போடுவதன் மூலம் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.
வெறிநோய் தடுப்பூசி முகாம்:
நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு வெறிநாய் பரவுவதை தடுப்பதற்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில், செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம், நாளை 13ம் தேதி சனிக்கிழமை, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள, கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வீட்டில் உள்ள நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளை முகாமிற்கு அழைத்து வந்து, வெறிநோய் தடுப்பூசி போட்டு, வெறிநோய் பராமல் பாதுகாத்துக்கொள்ளலாம் என கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.