முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி: 100 மாணவர்கள் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குனர் ஜோதி தலைமை வகித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு, தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
கல்லூரி மாணவர்களுக்கு, அண்ணாவும் தமிழ் மலர்ச்சியும், அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசு ரூ. 5,000, 2-ம் பரிசு ரூ.3,000, 3-ம் பரிசு ரூ.2,000 மற்றும் ஆறுதல் பரிசாக, அரசு பள்ளிகளை சேர்ந்த இரண்டு பேருக்கு தலா ரூ.2,000 வீதம் வழங்கப்படும் என, தமிழ் வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.