கரும்பு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்பு நிலுவைத்தொகையை 15 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை விவசாயிகளுக்கு, வரவேண்டிய நிலுவைத்தொகையை 15 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர், தமிழக சர்க்கரைத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-2022ம் ஆண்டிற்கான, கரும்பு அரவைப் பருவம் 25.11.2021ல் தொடங்கி 20.03-2022ல் முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 1 முதல் இது வரை 85 நாட்களுக்கு மேலாக, ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. விவசாயிகள்ஆலைக்கு சப்ளளை செய்துள்ள மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கரும்புக்கு சுமர் ரூ.35 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
கரும்பு பதிவு ஒப்பத்தப்படி, கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு வழங்கிய 14 தினங்களுக்குள் கரும்புக்கான கிரயத் தொகை ஆலை மூலம் வழங்கப்படவேண்டும். வழங்காமல் தாமதம் ஆனால், ஒப்பந்தப்படி தாமதமாகும் நாட்களுக்கு 15 சதவீத வட்டி சேர்த்து ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.
எனவே சக்கரை ஆலை நிர்வாகம் கரும்பு கிரயத்தொகை நிலுவை உள்ள விவசாயிகளுக்கு, 15 சதவீத வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.