நாமக்கல்: நீர்நிலைப் புறம்போக்கில் 46 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கில் ஆக்கிரமிப்பில் இருந்து சுமார் 46 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள நீர்நிலைப் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் அனைத்தையும் உடனடியாக மீட்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டிஅனைத்து மாவட்டத்திலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
பரமத்திவேலூர் தாலுக்கா. அ.பொன்மலர்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றின் ஓரம் தனியார் ஒருவர் 2 ஏக்கர் பரப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தார். மாவட்ட கலெக்டர் ஸ்யோசிங் உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நிலத்தை மீட்டனர்.
மோகனூர்: மோகனூர் அருகே உள்ள கொமாரபாளையம் கிராமத்தில் 75 சென்ட் வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால் புறம்போக்கை மீட்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையொட்டி, தாசில்தார் தங்கராஜ் தலைமையில், பரமத்திவேலூர் பாசனபிரிவு பணி ஆய்வாளர் துரைராஜ், துணை தாசில்தார் கணபதி, பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் புவனேஷ்வரி மற்றும் கொமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் வாய்க்கால் புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி அரசுக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை மீட்டனர். மேலும் எஸ்.வாழவந்தி கிராமத்தில் ஏரி புறம்போக்கில் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் அளவுள்ள நிலத்தையும் அதிகாரிகள் மீட்டனர்.
ராசிபுரம்: ராசிபுரம் தாலுக்கா மங்களபுரம், மத்துருட்டு கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பில் இருந்த 35 ஏக்கர் நிலத்தை, நாமக்கல் சப்கலெக்டர் மஞ்சுளா முன்னிலையில் அதிகாரிகள் மீட்டனர். ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை பிடிஓ சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.