குடிபோதையில் கல்வி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த தலைமை ஆசிரியர்
நாமக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் கல்வி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல்லை சேர்ந்தவர் திருச்செல்வன் (வயது52). இவர், சுண்டக்காம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி, சுபா, திண்டமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். பள்ளியின் வங்கி வரவு, செலவு கணக்குகளை, வேறொரு வங்கிக்கு மாற்றம் செய்யும் பணியை, வட்டார வளமைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமையாசிரியர் திருச்செல்வன், இன்று பகல் 12.30 மணியளவில், குடிபோதையில் வந்து, நாமக்கல் வட்டார வளமையத்தில் உள்ள பெண் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும், அங்குள்ள நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தனது காரில் அதிவேகமாக சுற்றி சுற்றி வந்துள்ளார். தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வந்திருந்த பலரும் தலைமை ஆசிரியர் திருச்செல்வனின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், கல்வித்துறையினர் புகார் தெரிவித்தனர். தலைமையாசிரியர் திருச்செல்வன் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதுடன், தன்னை சஸ்பெண்ட் செய்யும்படி குடிபோதையில் மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட தலைமையாசிரியர் திருச்செல்வனை, ஆசிரியர்கள் சிலர் சமாதானப்படுத்தி வெளியேற்றினர். குடிபோதையில் அரசு பள்ளி தலைமையாசிரியர் ரகளையில் ஈடுபட்டது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.