சென்னையில் வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்: மணல் லாரி சம்மேளனம்
தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக்கோரி வருகிற 13ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மணல் லாரி உரிமையார்கள் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
HIGHLIGHTS
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன, அவசர செயற்குழு கூட்டம், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் நடைபெற்றது. சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
தமிழகத்தில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில், தரமான ஆற்று மணல் கிடைத்திடவும், மணல் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கட்டிட கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், தமிழகத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி கிடைத்தும், இயக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை மணல் (எம் சாண்ட்), ஜல்லி, கிராவல்மண், சவுடுமண் உள்ளிட்ட அனைத்து கனிமங்களையும் குவாரிகளில், லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பாரம் ஏற்றக்கூடாது. அவ்வாறு ஏற்றிவிடும் குவாரி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து, லைசென்சை ரத்து செய்ய வேண்டும். அனைத்து எம் சாண்ட் குவாரிகளிலும் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வாகனங்களுக்கு ஆன் லைன் அபராதம் விதிக்கும் நடைமுறையை திரும்பப் பெற்று, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு சம்பவ இடத்திலேயே ஸ்பாட் ஃபைன் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் இருந்து, அண்டை மாநிலங்களுக்கு மணல் உள்ளிட்ட அனைத்து கனிமங்களையும் கடத்திச் சென்று அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதை தடுக்கும் வகையில், மாவட்டம் தோறும், போலீஸ் துறையில் தனியாக கனமவள கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், அழிந்து வரும் மோட்டார் தொழிலை பாதுகாக்கவும், கடந்த 1ம் தேதி முதல், நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவதை கைவிட்டு, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மத்திய, மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், வரும் 13ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.