இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தல்
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார்.
HIGHLIGHTS
நாமக்கல் வடக்கு மற்றும் தெற்று அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேடு குறித்த விபரங்களை தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விபரங்கள், மாணவர்கள் வராதது குறித்து, அவர்களின் பெற்றோரிடம் கேட்கப்பட்ட விபரம் குறித்தும் கேட்டறிந்தார். பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாணவ மாணவியரிடம் கலந்துரையாடிய கலெக்டர், மாணவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து படித்து, முழு ஈடுபாட்டையும், உழைப்பையும் படிப்பில் செலுத்த வேண்டும். அப்போதுதான், உங்கள் கனவை நிறைவேற்றி இலக்கை அடைய முடியும். கல்விக்கு பெற்றோரின் பொருளாதார நிலை ஒரு தடையல்ல.
ஆகவே, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது ஒரே குறிக்கோள் படிப்பு மட்டுமே என்று, மிகுந்த கவனத்துடன் படித்து, தங்களது இலக்கை அடைய வேண்டும் என்று கூறினார். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.