அனுமதியின்றி ஊர்வலம்: 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்கு
நாமக்கல்லில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற விடுதலைக் களம் அமைப்பைச் சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்.16ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த விடுதலைக் களம் அமைப்பினர் புதுச்சத்திரம், பொம்மைக்குட்டைமேடு ஆகிய இடங்களில் ஊர்வலமாக சென்று கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்த விடுதலைக்களம் அமைப்பின் தலைவர் நாகராஜ் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கட்டபொம்மன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் காந்தியவாதி ரமேஷ், பாஜக பிரமுகர் பிரணவ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாக விடுதலைக் களம் தலைவர் நாகராஜ் உட்பட 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.