நாமக்கல் அருகே ரூ.9.72 கோடியில் புதிய தொழிற்பேட்டை: முதல்வர் துவக்கி வைப்பு
நாமக்கல் அருகே ரூ.9.72 கோடி புதிய தொழிற்பேட்டையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் உருவாக்குதல், தொழில்முனைவோர் குழுமங்களுக்கு பொது வசதி மையங்கள் ஏற்படுத்துதல், தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்து, புதிய தொழிற்பேட்டைகளின் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், ராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில், ரூ.9.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 பேர் நேரடியாகவும், 2,500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில், 107 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், துறை செயலாளர் அருண்ராய், சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.