ஓட்டுக்காக ஸ்டாலின் இரட்டை வேடம் - எல்.முருகன்
திமுக தலைவர் ஸ்டாலின் ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுகிறார் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறினார்.
நாமக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகள் மாநாடு இன்று நடைபெற்றது. பாஜகவின் நாமக்கல் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசினார்.இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014 ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தாக்குதல் கூட தமிழக இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படவில்லை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இனி இது போன்று நடக்க கூடாது என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வேல் வழங்கப்பட்டுள்ளது, பாஜக நடத்திய வேல் யாத்திரைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். பாஜகவுக்கு இன்று தமிழக மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் தானும் வேலெடுத்து ஒரு போலியான நாடகத்தை நடத்தி வருகிறார். இது எல்லோருக்கும் தெரியும். இந்து மத வழிபாடுகளை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுகிறார். வேலேந்தியதும் அதுபோலத்தான் என்றும் ஒருவேளை ஸ்டாலின் திருந்தியிருந்தால் நன்றி எனவும் தெரிவித்தார்.