உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் பணம் பறிமுதல்
அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4,94,607 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50,000க்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணமோ, பொருளோ கொண்டு செல்லக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அரவக்குறிச்சி பேரூராட்சி சின்னாக்கவுண்டனூர் பிரிவு, வீரமாத்தியம்மன் கோவில் அருகே ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் வீராசாமி தலைமையிலான பறக்கும் படையினர், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக சென்ற காரில் சாந்தப்பாடியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ,4,94,607 கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கம்பிவேலி அமைப்பதற்கான கம்பி வாங்குவதற்கு பணத்தை கொண்டு செல்வதாக குறிப்பிட்ட கருப்பசாமியிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால் மேற்படி தொகை பறிமுதல் செய்யப்பட்டு, அரவக்குறிச்சி பேரூராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.