கிராம பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய 6ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ லஞ்சம் வாங்கியபோது காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு கையும் களவுமாக பிடித்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் , ஶ்ரீபெரும்புதூர் தாலுகா உட்பட்ட மகாதேவிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் தினேஷ் (வயது 24). இவர் தனது தாத்தா பெயரில் உள்ள வீட்டு மனை மற்றும் காலி மனை உள்ளிட்டவை தனது பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மகாதேவி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுப்பில் உள்ளதால் குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கூடுதல் பொறுப்பாக மகாதேவி மங்கலம் கிராமத்திற்கு பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த உதய குமாரிடம் மனு கொடுத்தார். அப்போது பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 8 ஆயிரம் கேட்டுள்ளார். பிறகு ரூபாய் 6 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தினேஷ் குமார் காஞ்சிபுரம் லஞ்சம் ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்படி ரசாயனம் கலந்த ரூபாய் 6 ஆயிரம் பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து அதே அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.