பராமரிப்பற்ற நிலையில் திருக்கோயில் உற்சவ வாகனங்கள்
மாகறல் திருக்கோவிலின் உற்சவ வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்து , பராமரிப்பின்றி இருப்பதாக பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்
HIGHLIGHTS
தமிழகத்தில் அனைத்து ஜாதி , மதத்தினரையும் எவ்வித பாகுபாடும் இன்றி ஒருங்கிணைப்பது கோயில் திருவிழாக்கள். நமது முன்னோர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருக்கோயில்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூட பிரம்மோற்சவ விழா என பத்து நாட்கள் காலை , மாலை திருவிழாக்களை நடத்துவது வழக்கம்.
அத்தருணத்தில் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் நகர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதற்காக நாகம் , குதிரை , சப்பரம் , யானை, கருடன் , ராவணன் , சந்திர, சூரிய பிரபைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வாகனங்கள் மரத்தால் வடிவமைக்கப்பட்டு பல வண்ணங்களால் அழகுபடுத்தி வீதி உலா வருவது வழக்கம். திருவிழா முடிந்ததும் சுத்தம் செய்து போதிய பாதுகாப்புடன் வாகனம் மண்டபங்கள் என அழைக்கப்படும் பகுதியில் பாதுகாக்கப்படுவது வழக்கம்.
ஆனால் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த மாகறல் வீற்றிருந்த பெருமாள் திருக்கோயிலில் உள்ள சிதலமடைந்த வாகனங்களை பராமரிக்காமலும் , மேலும் சிதிலம் அடையாமல் இருக்க வாகன மண்டபத்திற்கு போதிய பாதுகாப்பு வேலி அமைக்கவும் இந்து சமய அறநிலைத்துறை தவறியுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட வருமானம் ஈட்டி வரும் நிலையில் இதுபோன்ற நூற்றாண்டுகள் கடந்த கலை பொக்கிஷங்களை பாதுகாக்க செலவு செய்வதில் தயக்கம் காட்டுவது ஏன் என பக்தர்கள் பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர்.