காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தாலுகா பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்களில் 438 துவக்கப் பள்ளிகளில் இன்று முதல்வர் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கப்படுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 438 துவக்கப் பள்ளிகளில் இன்று முதல் காலை உணவு திட்டம் துவங்கியது.
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் கிராம துவக்கப்பள்ளியில் பயிலும் 289 மாணவ, மாணவிகள் இன்று காலை உணவு அருந்த வருகை புரிந்தனர். அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்த பின் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புடன் கூடிய உணவு வழங்கப்பட்டது.
உணவினை ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் குழந்தைகளுக்கு உணவுகளை வழங்கினர்.
பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை ஒழுங்கு படுத்தி இரு வகுப்பறையில் தனித்தனியாக போதிய இடைவெளியுடன் அமர வைத்து உணவு உண்டபின் அவர்களுக்கு செய்ய வேண்டிய நடைமுறைகளையும் தெரிவித்தனர்.
மாணவ, மாணவிகள் தங்களது மீதமுள்ள உணவுகளை உரிய பாத்திரத்தில் வைத்து கால்நடைகளுக்கு அளிக்கும் வகையில் சேமித்தனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டு பின்பு பள்ளி வகுப்புகள் துவங்கப்பட்டது.
இன்று துவக்கப்பட்ட காலை உணவு திட்டத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசித்து உணவு அருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் , பள்ளி தலைமை ஆசிரியர் ஜமுனா எஸ் எம் சி குழு தலைவர் பிரியா மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திருப்புட்குழி துவக்கப்பள்ளியிலும், எம்.பி செல்வம் நாயக்கன் பேட்டை துவக்க பள்ளியிலும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆனைப்பள்ளம் துவக்க பள்ளியிலும், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள துவக்க பள்ளியிலும் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.