ஊரடங்கு தடையை மீறினால்... போலீசார் கடும் எச்சரிக்கை!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல், இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தியது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். நாளை ஒருநாள் பஸ் போக்குவரத்து இயங்காது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையான பால், மருந்து, சரக்கு வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கின்போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் மாநில சோதனைச்சாவடிகள், மாவட்ட சோதனைச்சாவடியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மக்கள் அவசியத் தேவையின்றி வெளியே சுற்றினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.