ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்
ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோடு, சின்ன மார்க்கெட் பகுதி, தலைமை அரசு மருத்துவமனை வளாகம், சூளை கொல்லம்பாளையம் உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இட்லி 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பசியை போக்கி வந்தனர்.
கொரோனா பரவல் காலத்திலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும் கூடுதலாக உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி முதல் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அம்மா உணவகங்களில் பழைய முறையில் கட்டணம் வசூலித்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.