ஈரோடு மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கு 3.1 லட்சம் டன்
ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தி 3.1 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், நெற்பயிர் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு அடுத்த பெரியசடையம்பாளையம் கிராமத்தில் செம்மை நெல் சாகுபடி முறையை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது : செம்மை நெல் சாகுபடி ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய சாகுபடி பரப்பு இலக்காக, 63 ஆயிரத்து 800 ஹெக்டேரும், உணவு தானிய உற்பத்தி இலக்காக 3.1 லட்சம் மெட்ரிக் டன்னும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை கூடுதல் மகசூல் தரும் என்பதால், நிரூபணம் செய்யப்பட்ட தொழில்நுட்பமாகும்.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் மட்டுமே பயன்படுத்தி ஒரு சென்ட் நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்து குறைந்த வயதுடைய 15 நாள் ஆன செழிப்பான ஒற்றை நாற்றை போதிய இடைவெளி விட்டு நடுவதால் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. மேலும் கூடுதல் விலை கிடைக்கும் வாயப்பும் உள்ளது. எனவே, விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வேளாண்துணை இயக்குனர்கள் அசோக், சிவகுமார், உதவி இயக்குனர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.