ஈரோட்டில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் போராட்டம்
ஈரோட்டில் அம்மா உணவக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் உணவு வழங்க 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது
HIGHLIGHTS
ஈரோடு, அகில்மேடு வீதியில் சின்ன மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில், சுய உதவி குழுவை சேர்ந்த 10 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்குதல், சமையல், உணவு பரிமாறுதல் என பல தரப்பட்ட வேலைகளையும் தங்களுக்குள் பகிர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் இந்த உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் சேர்க்கப்பட்டனர். அவர் கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் வழங்கும் பணியை மட்டுமே செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் மற்ற ஊழியர்கள், நீங்களும் அனைத்து வேலை களையும் மற்றவர்களை போல செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்த இருவரும் தொடர்ந்து டோக்கன் கொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணவகத்தில் உள்ள 10 ஊழியர்களும் உணவு பரிமாறாமல் திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அனைவரையும் போல, புதிய ஊழியர்கள் 2 பேரும் அனைத்து வேலைகளையும் பகிர்ந்து செய்ய வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து அம்மா உணவக ஊழியர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். இதனால் சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பின்னர் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.