பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் - விவசாயிகள் கவலை
பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த அரளி, காக்கடா உள்ளிட்ட பூக்கள் ஊரடங்கு வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் ரேகடஹள்ளி, பத்திரெட்டிஹள்ளி, சுங்கரஹள்ளி, சில்லாரஹள்ளி, அய்யம்பட்டி, ஆத்தூர், காவேரிபுரம், கேத்துரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அளறி, காக்கடா, கனகாம்பரம், சன்னமல்லி, குண்டு மல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பூக்களை அறுவடை செய்து, தர்மபுரி, பெங்களூர், சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் விவசாயிகள் பூக்களால் நல்ல லாபம் அடைந்து வந்தனர். தற்போது, கொரோனோ ஊரடங்கு காரணமாக அனைத்து பூ மார்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இதனால், பூக்களை வாங்குவதற்கு ஆட்களே இல்லாமல், சாகுபடி செய்த அறளி, சம்பங்கி, செண்டுமல்லி,காக்கடா, கனகாம்பரம் சன்னமல்லி ஆகிய பூக்களை பறிக்க முடியாமல் விவசாய நிலங்களில் அப்படியே விவசாயிகள் போட்டு விட்டுள்ளனர். இதனால், பூக்கள் மலர்ந்து கருகி வருகிறது. விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்து கவலை அடைந்துள்ளனர் .
இதுகுறித்து அய்யம்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் கூறியதாவது: கொரோனோ ஊரடங்கால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தோட்டங்களில் பயிரிடப்பட்ட பூக்கள் மற்றும் வெற்றிலை உள்ளிட்டவைகள் அறுவடை செய்ய முடியாமல் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் தோட்டங்களில் மலர்ந்த மலர்கள் கருகியும், வெற்றிலை அறுவடை செய்யப்படாமல் வீணாகிறது. பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.